"நாடென்ன செய்தது எனக்கு-எனக்
கேள்விகள் கேட்பது எதற்கு-நீ
என்ன செய்தாய் அதற்கு-என்று
நினைத்தால் நன்மை உனக்கு"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடித்த"நான் ஏன் பிறந்தேன்"என்ற திரைப்படத்தில் வரும்
பாடலில் வரும் வைர வரிகள் இவை.
உங்கள் கண்ணுக்குத் தென்பட்டோரின் துன்பங்களைத் தீர்க்க உங்களால் முடிந்தவரை உதவுங்கள்.உங்கள் உதவியானது தனிப்பட்ட ஒருவரின் துன்பத்தைத் தீர்ப்பதாக இருக்கலாம்.நீங்கள் குடியிருக்கும் தெருப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
அல்லது உங்கள் நெருங்கிய உறவினர்க்கிடையே இருக்கலாம்.ஏன் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.
"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்"
இவ்விரு குறள் பாக்களையும் பாருங்கள்.மகன் தந்தை இருவருக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் உதவியானது இருவரையும் சமுதாயத்தில் எத்துணைத் தூரம் ஏற்றம் கொள்ளவைக்கிறது என்று.
அடுத்ததாக உறவுமுறை இல்லாத இருவரின் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.
"உடுக்கை இழந்தவன் கை போலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இடுப்பில் கட்டியிருக்கும் துணி-வேட்டி என்றே வைத்துக்கொள்வோம்.அது தற்செயலாகத் திடீரென்று அவிழ்ந்து விட்டால் நமது கை அனிச்சையாகச் செயல்பட்டு வேட்டியைப் பிடித்துக் கட்டி விடுகிறதல்லவா?அதுபோலவே ஒருவனது துன்பத்தைத் துயரைப் பார்த்த நண்பன் எந்த எதிபார்ப்பையும் பாராது உடனே செயல்பட்டு அத்துன்பத்தைக் களையவேண்டுமாம்.அது தான் உதவி.
தர்மத்திற்கும் தானத்திற்கும் நிறையவே வேறுபாடு உண்டு.பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்வது தர்மம்.போகும்போது புண்ணியமாவது கிடக்கட்டும் என்று செய்யும் உதவியானது தர்மமாகும்.ஏதும் எதிர்பாராது செய்வது தானமாகும்.
அவ்வாறு செய்யும் உதவி எத்தன்மைத் தக்கதாக இருக்க வேண்டும்?
விரோதியாக இருந்தாலும் தாகத்தைத் தீர்ப்பது தான் தண்ணீரின் தன்மை.
இப்படி இருக்க வேண்டும்.
கொல்கத்தா தெருக்களில் எந்த ஆதரவுமின்றி தொழுநோயால் பீடிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு நேசக்கரம் நீட்டித் தொட்டுத் தூக்கி மருந்திட்டுச் சிகிச்சை அளித்த ஒரு மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதற்காக கொல்கத்தா நகரின் தெருக்களிலுள்ள கடைகளுக்குச் சென்று ஏதாவது உதவுங்கள் என்று கையேந்துவாராம்.ஒருமுறை ஒரு வியாபாரி இவர் ஏந்திய கைகளில் காறித் துப்பினானாம்.பதிலுக்கு அம் மாமனிதர் என்ன செய்தார் தெரியுமா?கைகளிலிருந்த எச்சில் கறையைத் துடைத்து விட்டு நீங்கள் கொடுத்த எச்சிலை நான் எடுத்துக் கொண்டேன்.நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த ஏழைக்காக ஏதேனும் உதவுங்கள் என்றாராம்!
மெசிடொனியா நாட்டில் பிறந்தார்.இந்தியாவிற்கு வந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிசை அளிக்க உதவி செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவழித்தார்.இப்பெண்மணியின் பெயர் தான் அன்னை தெரசா.இவரது சேவைக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.அன்றாட வாழ்வில் இவர் செய்த உதவிகள் தானே மனிதகுலத்திற்கான சேவை என்று போற்றப்படுகிறது!
பிறருக்கு உதவுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.அதற்கு நல்ல மனம் வேண்டும்.பண்பட்ட நல்ல சிந்தனை வேண்டும்.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்வதினால் உங்களுக்கு மனநிறைவு மட்டுமே ஏற்படுகிறது.ஆனால் அவ்வுதவியைப் பெறும் நபரின் அத்தியாவசியமான தேவையை அது பூர்த்தி செய்து விடுகிறதே!அதுவே உங்களின் மன நிறைவை மேலும் கூட்டுகிறதே!!
உதவி கேட்டுக் கை ஏந்துவது இழிவானது தான்.அவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறுவது அதைவிட இழிவானதாகும்.அதேபோல் இந்தா பிடி என்று உதவுவது உயர்ந்ததாகும்.அவ்வாறு வரும் உதவி தனக்குத் தேவை இல்லை என்று மறுப்பது அதைவிட உயர்ந்ததாகும்.அவ்வாறு மறுக்கும் நிலை வர வேண்டும்.அதுவரை மனிதநேயத்தின் தேவை இருக்கிறது.
ஆதலினால் மற்றவர்க்கு உதவிகள் செய்வீர் உலகத்தீரே!
உதவியின் தேவை
Labels: மனித நேயம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment