சட்டத்தை ஏமாற்றி துப்பாக்கி லைசென்ஸ் பெற முயற்சி.
Posted by
Subramanian
at
5
comments
மோசடி அம்பலமானது
தாய்மாமன் தயாரித்திருந்த குத்தகை ஆவணங்களான இருபது ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாட்கள் இரண்டில் குத்தகையின் விபரங்களை எழுதி,அவைகளில் தனது தமக்கையாரின் கையெழுத்து வாங்கியிருக்கிறார்.இரண்டிலும் சாட்சியாகத் தனக்கு நம்பகமான ஒருவரிடமிருந்து சாட்சிக் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார்.
அந்த இரண்டு முத்திரைத் தாட்களையும் கவனமாகப் பரிசீலித்ததில் இரண்டு தவறுகள் புலனாயின.
சாதாரணமாக முத்திரைத் தாள் ஒவ்வொன்றிலும் மேல்புறம் முத்திரைத்தாள் விற்பனையாளரின் பெயர்,முகவரி கொண்ட ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்தப்பட்டிருக்கும்.அதில் முத்திரைத் தாளின் வரிசை எண்,விற்பனையான தேதி,முத்திரைத் தாள் வாங்கியவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
இந்த வழக்குக் கோப்பில் இருந்த முத்திரைத் தாட்கள் சம்பந்தப்பட்ட ஊரில் வாங்காமல் வேறு ஒரு ஊரில் வாங்கப்பட்டிருந்தன.வாங்கியவரின் பெயரும் ஊரும் மாறுபட்டிருந்தன.இவை எல்லாவற்றையும் விட,வாங்கிய தேதி குத்தகை எழுதிய தேதிக்குப் பின்னர் வரும் தேதியாக இருந்தது. அதாவது முத்திரைத் தாட்கள் வாங்கிய தேதி 2008 மே மாதம் 22ந்தேதி என்று வைத்துக் கொள்வோம்.அதில் குத்தகை விபரம் எழுதிய தேதி 2007 சனவரி மாதம் 15 என்று இருந்தால் எப்படி இருக்கும்?
இவை எல்லாவற்றையும் விட,இன்னொரு முரண்பாடு என்னவென்றால்,இரண்டு குத்தகை ஆவணங்களும் நிலங்கள் இருக்கும் அந்தந்தக் கிராமங்களில் உள்ள வெவ்வேறு தோட்டங்களில் வைத்து எழுதப்பட்டதாக இருந்தன.இரண்டிலும் ஒரே நாள் காட்டப்பட்டிருந்தன.அவைகளில் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்த நபரைத் தாசில்தார் ஏற்கனவே விசாரித்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார்.அந்த வாக்குமூலங்களைப் பரிசீலித்ததில்,குத்தகை ஒப்பந்தம் எழுதிய அன்று பிற்பகல் மூன்று மணி அளவில் நில உரிமையாளரும் குத்தகைதாரரும் கையெழுத்துப் போட்டபிறகு தாமும் சாட்சிக் கையெழுத்துப் போட்டதாக வாக்குமூலம் கொடுத்திருந்தார்.இதேமாதிரி குத்தகைதாரரின் வாக்குமூலமும் இருந்தன.
அதெப்படி ஒரே நாளில் ஒரே நேரத்தில் இவர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கமுடியும்?
சப் கலெக்டரிடம் இந்த முரண்பாடுகளைக் காட்டி விளக்கினேன்.சொத்துக்காக இவ்வாறெல்லாம் செய்கிறார்களே என்று வேதனை அடைந்தார்.
அடுத்த வாய்தா அன்றே,குத்தகை உரிமையைப் பதிவு செய்து வட்டாட்சியர் பிறப்பித்திருந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.
Posted by
Subramanian
at
8
comments
Labels: நல்ல தீர்ப்பு
தமிழ்நாடு விவசாய நிலங்கள்(குத்தகை உரிமைப் பதிவு)சட்டம்1969 ன் கீழ் ஒரு வழக்கு
சப் கலெக்டர் அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது இன்னொரு சுவாரசியமான வழக்குக் கோப்பு நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.
அதாவது விவசாய நிலங்களைப் பெரும்பாலும் குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.குத்தகைக்கு எடுத்தவர் நெல்,கரும்பு,பருத்தி என்று பயிரிடுவார்கள்.விளைந்த பயிரில் ஒரு பங்கு அல்லது அதற்கு ஈடான பணம் குத்தகைக்கு ஈடாக நில உரிமையாளருக்குச் சேரும்.
முன்பெல்லாம்,குத்தகைதாரர் குத்தகை சரிவரக் கொடுக்காமல் இருந்தாலோ காலம் தாழ்த்திக் கொடுத்தாலோ நில உரிமையாளர் குத்தகைதாரரை நிலத்தைவிட்டு வெளியேற்றி விடுவார்.இந்நிலையில் குத்தகைதாரரைப் பாதுகாக்கச் சட்டம் ஏதும் இல்லாமல் இருந்தது.காலமெல்லாம் நிலத்தில் இறங்கிப் பாடுபடும் விவசாயிக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.இந்த அவல நிலையை அகற்றவேண்டி 1969ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது.தமிழ்நாடு விவசாய நிலங்கள்(குத்தகை உரிமைப் பதிவு)சட்டம் என்று அதற்குப் பெயர்.
இந்தச் சட்டத்தின்படி ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் ஒருவர் சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தாரிடம் மனுச் செய்தால் போதும்.தாசில்தார் அம்மனு மீது உரிய விசாரணை நடத்துவார்.விசாரணையில் குத்தகைக்குப் போடுவது உண்மை எனத் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குரிய குத்தகைப் பதிவேட்டில் அந்நிலத்தின் குத்தகைதாரராக அவரைப் பதிவு செய்வார்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒரு குத்தகைதாரரை அவ்வளவு லேசில் வெளியேற்றிவிட முடியாது.சட்டம் அவருக்குப் பல வழிகளில் பாதுகாப்புத் தருகிறது.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு நபர் தனது சொந்தத் தமக்கையாரின் அனைத்து நிலங்களுக்கும் தன்னைக் குத்தகைதாரராகப் பதிவு செய்துகொண்டார்.
அதாவது தமக்கையின் கணவர் மிகப் பெரிய நிலச் சுவான்தார்.அண்ணன் தம்பி இல்லை.அவருக்கு இரண்டு கிராமங்களில் மொத்தம் நஞ்சை ஒரு பதினைந்து ஏக்கர்,புஞ்சை இருபது ஏக்கர் இதற்கும் மேலாகத் தென்னந்தோப்பு ஒரு பத்துப் பதினைந்து ஏக்கர் இருந்தது.இரண்டு ஆண் வாரிசுகள்.ஒரு மகனுக்கு இருபது வயது.மற்றோருவருக்குப் பதினேழு. திடீரென்று ஒரு நாள் இரவு மாரடைப்பால் காலமாகிவிட்டார்.
அந்திமச் சடங்குகள் எல்லாம் முடிந்தன.உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என்பது தெரிந்தது.மனைவியோ வெளியே சென்று விவசாயத்தைக் கவனிக்க இயலாத நிலை.இரண்டு மகன்களுக்கும் இளம் வயது.எல்லாம் சேர்ந்து,குடும்பப் பொறுப்புமுழுதும் காலஞ்சென்றவரின் மைத்துனரிடம் தானாக வந்தது.தகப்பனில்லாத இரண்டு ஆண்மகன்களுக்கும் இவரே கார்டியன் ஆனார்.
காலம் சென்றது.இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் குத்தகைதாரராகத் தன்னை நியமிப்பதாக இரண்டு ஆவணங்கள் தயார் செய்து தமக்கையிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டார்.அவ்வளவு சொத்துக்களுக்கும் குத்தகைப் பணம் மொத்தம் எவ்வளவு தெரியுமா?ஆறுமாதங்களுக்கு ஒருமுறை ரூ 680/-மட்டுமே.கிராமத்தில் உள்ள தனக்கு மிக நெருக்கமான ஒருவரிடம் சாட்சிக் கையெழுத்தும் அந்த இரண்டு ஆவணங்களிலும் வாங்கிக் கொண்டார்.உடனே தாசில்தாருக்குத் தன்னை மேற்கண்ட அனைத்து நிலங்களுக்கும் குத்தகைதாரராகப் பதிவு செய்யும்படி இரண்டு மனுக்கள் கொடுத்தார்.
விசாரணை நிலுவையில் இருந்தபோது,மேற்சொன்ன தமக்கை காலமாகி விட்டார்.விசாரணையும் நடந்தது.இரண்டு ஆவணங்களின் அடிப்படையிலும்,அவைகளில் சாட்சிக் கையொப்பம் போட்டிருந்த நபரின் வாக்குமூலத்தை வைத்தும் மேற்படி நிலங்கள் அனைவற்றிற்கும் இவரைக் குத்தகைதாரராகப் பதிவு செய்து கிராமத்திற்கு ஒன்றாக இரண்டு உத்தரவுகளைத் தாசில்தார் பிறப்பித்தார்.
இவ்வளவும் காலஞ்சென்ற அந்த நிலச் சுவான்தாரரின் இரண்டு மகன்களுக்கும் தெரியாமல் நடந்தன.
தெரிந்தபோது எல்லாம் முடிந்துவிட்டது.
தாய்மாமனாயிற்றே.எதிர்த்துப் பேசவும் முடியவில்லை.ஆனாலும் நாளாவட்டத்தில் பிரச்சனைகள் பெரியதாகி தாய்மாமனுடன் பேசுவதும் நின்றுபோனது.இரண்டு மகன்களும் ஒரு வழக்குரைஞரைக் கலந்தாலோசித்து தாசில்தாருடையஇரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து சப்கலெக்டருக்கு இரண்டு மேல்முறையீடுகள் செய்தார்கள்.
வருவாய்த்துறையில் எந்த வேலையும் அவ்வளவு சீக்கிரமாக முடியாது.சவ்வாக இழுத்துக்கொண்டே போகும்.இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் மீதும் வாய்தா மேல் வாய்தாக்களாக நீண்டுகொண்டே போனது.சுமார் நான்கு ஆண்டுகளாகியும் வழக்கு வாய்தாக்களிலேயே இருந்தன.இந்நிலையில்தான் அந்தப் பிரிவுக்கு நான் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.
ஒரு வாரத்தில் அந்த மேல்முறையீடுகளும் அடுத்த வாய்தா தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.ஒவ்வொரு கட்டும் வெறும் வாய்தா கேட்கும் மனுக்களால் நிறைந்திருந்தன.சப் கலெக்டருக்கு வேறு அவசரப் பணி காரணமாக அன்று விசாரணை நடக்கவில்லை.வழக்கம் போல வாய்தா கொடுக்கப்பட்டது.எல்லா கட்சிக்காரர்களும் சென்றபின் மேற்சொன்ன இரண்டு மகன்களும்(மேல்முறையீடுதாரர்கள்)என்னை வந்து சந்தித்தனர்.தாய்மாமனால் வஞ்சிக்கப்பட்ட அவலங்களைச் சொன்னார்கள்.சட்டத்துக்குட்பட்டு என்ன செய்ய இயலுமோ செய்வதாகச் சொல்லி அனுப்பிவைத்தேன்.அன்றே அவ்விரு கட்டுகளையும் தீவிரமாகப் பரிசீலித்ததில் குத்தகை ஆவணங்களில் தாய் மாமன் செய்திருந்த ஒரு மிகப்பெரும் தவறைக் கண்டுபிடித்தேன்.
Posted by
Subramanian
at
3
comments
Labels: பேராசை பெருநஷ்டம்